ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மிகப்பெரிய நகரமான ஜகார்த்தாவை அதன் பல்வேறு நகர்ப்புற பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக பெருந்திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகராக நுசாந்தரா மாறிய பிறகும் ஜகார்த்தாவை மத்திய அரசாங்கம் மற்றும் அண்டை நகரங்களுடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதற்காக ஜகார்த்தாவை ஒன்றிணைக்கும் வட்டார மன்றம் என்ற அதிகாரத்துவ குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனாகிய ஜிப்ரான் ராக்காபுமிங் ராக்கா இதற்கு தலைமையேற்கலாம் என பேச்சு அடிபடுகிறது.
ஜகார்த்தா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து, வெள்ளம், இடம் சார்ந்த திட்டமிடல், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதனைச் செயல்படுத்துவதற்கான அரசாங்க அமைப்புகளை ஒருங்கிணைக்கவும் மன்றம் ஒரு செயல்திட்டத்தை வடிவமைக்கும்.
ஆனால் ஜகார்த்தாவின் சிக்கலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இது போதுமா என்று நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர்.
இருந்தாலும் யார் அந்த மன்றத்தை வழிநடத்துவார் என்பதைப் பொறுத்து வெற்றி இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஜகார்த்தாவை நெருக்கிவரும் போக்குவரத்து நெரிசல், பருவகாலத்தில் ஏற்படும் வெள்ளம், மோசமாகி வரும் காற்றுத் தூய்மைக்கேடு போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அதன் முக்கிய நகரங்கள், புறநகர்ப் பகுதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
போகோரில் உள்ள நீரோட்டத்தைப் பாதிக்கக்கூடிய பகுதிகளில் அதிக அளவு மேம்படுத்தப்படுவதே ஜகார்த்தாவில் வெள்ளம் பெருகுவதற்கு முக்கிய காரணம் என்று ஜகார்த்தாவின் டிரிசாக்கி பல்கலைக்கழகத்தின் நகரத் திட்ட நிபுணர் நிர்வோனோ ஜோகா தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினையை சமாளிப்பதற்கு போகோரில் கட்டப்படும் வில்லா, ஹோட்டல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
போர்னியோ மலைப் பகுதியில் புதிய தலைநகரை உருவாக்குவது ஜகார்த்தாவின் சுமையை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ஜோக்கோ விடோடோ தலைநகரை ஜாவா நகரத்திலிருந்து நுசாந்தராவுக்கு மாற்றும் திட்டத்தை 2019ல் அறிவித்தார்.
தலைநகர் மாற்றத்தால் பல்வேறு அமைச்சு மற்றும் அரசாங்க அமைப்புகளில் வேலை பார்க்கும் 120,000க்கும் மேற்பட்ட பொதுத் துறை ஊழியர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜகார்த்தாவிலிருந்து நுசாந்தராவுக்கு இடம் மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.