ஹோனலூலு: தென்சீனக் கடலில் பிலிப்பீன்சுக்குச் சொந்தமான கப்பல்களைச் சேதப்படுத்தியதும் அதிலிருந்த சிப்பந்திகளுக்குக் காயம் ஏற்படுத்தியதும் பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் அனைத்துலகச் சட்டத்தை மீறிய செயல் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (மே 2), பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பெர்ட்டோ டியோடோரோவுடன் இணைந்து ஹவாயியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30), சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் பாறைத்திட்டுகளுக்கு அருகே சீனாவின் கரையோரக் காவற்படைக் கப்பல், பிலிப்பீன்ஸ் கரையோரக் காவற்படையின் இரண்டு கப்பல்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது. இதில் அக்கப்பல்கள் சேதமடைந்தன.
பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் சினத்தைத் தூண்டிய இந்நடவடிக்கையை அடுத்து, மணிலாவும் பெய்ஜிங்கும் அன்றாடம் ஒன்றை ஒன்று குறைகூறிவருகின்றன.
இந்நிலையில், 1951ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பரஸ்பரத் தற்காப்பு ஒப்பந்தப்படி நடந்துகொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஆஸ்டின் குறிப்பிட்டார். பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் தற்காப்பு அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் அவ்வாறு கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், தென்சீனக் கடல் வட்டாரம் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ஒன்றை ஒன்று தற்காக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படாமல் தடுக்க அமெரிக்காவும் பிலிப்பீன்சும் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறிய பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர், “எங்கள் உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும். பிலிப்பீன்ஸ் ஆயுதப் படை உறுப்பினர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அதைச் செயல்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.
தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிக்குச் சீனா உரிமை கோருகிறது. ஆண்டுக்கும் $3 டிரில்லியனுக்கும் அதிகமான கடல் வணிகப் பாதையாக விளங்கும் அதன் சில பகுதிகளுக்கு பிலிப்பீன்ஸ், வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா, புருணை ஆகியவையும் உரிமை கோருகின்றன.