ஜகார்த்தா: திறன்பெற்ற ஊழியர்களை நாட்டுக்குள் கவர்ந்திழுக்க இந்தோனீசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தோனீசியா இரட்டைக் குடியுரிமை வழங்கலாம் என்று மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தோனீசியச் சட்டத்தின்படி, பெரியவர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை இந்தோனீசியா அங்கீகரிக்காது. இரண்டு கடப்பிதழ்களை வைத்திருக்கும் ஒரு சிறுவருக்கு 18 வயதாகும்போது ஒரு கடப்பிதழைத் தேர்வுசெய்து மற்றொன்றைக் கைவிட வேண்டும்.
வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் இந்தோனீசியக் குடிமக்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கடல்துறை விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பண்ட்ஜைதன் கூறினார். ஆனால், அதுகுறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவிற்கும் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவிற்கும் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக திரு லுஹுட் பேசினார்.
இந்தோனீசியாவில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.3 பி.) முதலீடு செய்ய திரு நாதெல்லா உறுதியளித்தார்.
குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநரகத்தின் தரவுகளின்படி, 2019 முதல் 2022 வரை கிட்டத்தட்ட 4,000 இந்தோனீசியர்கள் சிங்கப்பூர் குடிமக்களாக மாறினர்.