ஜோகூர் பாரு: பத்து பகாட்டின் உல்லாச விடுதி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 11 அரசு ஊழியர்கள் உட்பட போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இயங்கவேண்டிய நேரத்தையும் தாண்டி அவ்விடுதி செயல்பட்டு வந்ததை அடுத்து காவல்துறையினர் அங்கிருந்த மொத்தம் 49 வாடிக்கையாளர்களைச் சோதனையிட்டனர்.
கைதான 30 சந்தேக நபர்களில் 17 வயது இளைஞர் ஒருவரும் இருந்ததாக ஜோகூர் தலைமைக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார். அந்த 17 வயது இளைஞனைச் சோதித்துப் பார்த்ததில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
அத்துடன் ஆறு வெளிநாட்டவரும் கைதானவர்களில் அடங்குவர்.
இதற்கிடையே, உல்லாச விடுதியின் 29 வயது பராமரிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட அரசாங்க ஊழியர்களை உள்ளடக்கிய அந்தச் சந்தேக நபர்களுக்கு எதிராகக் காவல்துறை நான்கு நாள் தடுப்புக்காவல் ஆணையைப் பெற்றுள்ளது.