துபாய்: மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக துபாய் அனைத்துலக விமான நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தது.
செயல்பாடுளை வழக்கநிலைக்குக் கொண்டுவர தான் பணியாற்றி வருவதாக அது கூறியது.
அந்த விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், விமானச் சேவைகளுக்குத் தாமதம் ஏற்பட்டுள்ளது அல்லது மாற்றி விடப்பட்டன என்றும் செயல்பாடுகள் வழக்கநிலைக்குத் திரும்ப சற்று நேரம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டது.
துபாய் விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் தங்களது பயணப் பெட்டிகளைப் பதிவுசெய்வதற்கான செயல்பாடுகளை புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நிறுத்தி வைத்ததாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்தது.
புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) மாலை துபாய் விமான நிலையத்தில் வந்திறங்க வேண்டிய விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
சாங்கி விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை துபாய்க்குப் புறப்படவிருந்த குறைந்தது இரு விமானச் சேவைகள் தாமதம் அடைந்தன.
சாங்கி விமான நிலையத்தின் இணையப் பக்கத்தின்படி, பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ494 விமானம், மாலை 5.10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சாங்கியிலிருந்து புதன்கிழமை இரவு 9 மணிக்குப் புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இகே355 விமானச் சேவையிலும் தாமதம் ஏற்பட்டது.
முன்னதாக, புதன்கிழமை அதிகாலை 12.50 மணிக்கு புறப்படவிருந்த இகே353 விமானம், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கழித்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டது.