செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் 38 வயது ஹஃபிசுல் ஹராவி என்று மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரை அதிகாரிகள் வலைவீசித் தேடுகின்றனர்.
ஹஃபிசுலைப் பார்த்தால் அவர் அருகில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்த தமது மனைவியை அவர் துப்பாக்கியால் சுட முயன்றதாக நம்பப்படுகிறது.
ஆனால் குறி தவறி மெய்க்காப்பாளர் ஒருவரின் வயிற்றில் குண்டு பாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஆடவர் படுகாயம் அடைந்தார்.
சந்தேக நபர் ஆயுதம் வைத்திருப்பதாகவும் அவரால் ஆபத்து ஏற்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரைப் பார்த்தால் காவல்துறையினரிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஹஃபிசுலும் அவரது மனைவியும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக அறியப்படுகிறது.
இதற்கு முன்பு ஹஃபிசுலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருப்பதாக மலேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் முகம்மது ஷுஹாய்லி முகம்மது ஸேன் கூறினார்.
2016ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மிரட்டல் விடுத்ததாக அவருக்கு எதிராக இரண்டு புகார்கள் உள்ளன என்றும் ஆக கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புகார் அளிக்கப்பட்டதை அடுத்த அவர் கைது செய்யப்பட்டிருந்ததாக திரு முகம்மது ஹுஹாய்லி கூறினார்.
அந்தச் சம்பவத்தின் காரணமாக அவரது மனைவி தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மெய்க்காப்பாளர்களைப் பணியமர்த்தியதாகத் தெரியவந்துள்ளது.
திருட்டு, அரசாங்க அதிகாரியாக வேடமிட்டது ஆகியவை தொடர்பாகவும் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததை அடுத்து, அங்குள்ள பாதுகாப்புப் பணிகள் மறுஆய்வு செய்யப்படும் என்று திரு முகம்மது ஷுஹால்லி தெரிவித்துள்ளார்.