ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலில், முன்னாள் சிறப்பு ராணுவப்படைத் தளபதியும் தற்போதைய தற்காப்பு அமைச்சருமான திரு பிரபோவோ சுபியாந்தோ, 72, வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (மார்ச் 20) முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் உரையாற்றிய திரு பிரபோவோ, அனைத்து இந்தோனீசியர்களுக்குமான அதிபராக இருக்க உறுதியளித்தார்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்களிப்பில் திரு பிரபோவோவும் அவரது துணை வேட்பாளர் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் 58.59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 96,214,691 வாக்குகள் பதிவாயின.
அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திரு அனீஸ் பஸ்வேடன்-முகைமின் இஸ்கந்தர் தரப்பு 24.95 விழுக்காட்டு வாக்குகளையும் திரு கஞ்சார் பிரனோவோ-மஹ்ஃபுட் முகமது தரப்பு 16.74 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றனர்.
தேர்தல் முடிவுகளை சட்டரீதியாக எதிர்க்கப் போவதாக மற்ற போட்டியாளர்கள் கூறும் நிலையில், தமக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்குத் திரு பிரபோவோ நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்தோனீசியர்கள் அனைவரும் ஒற்றுமையாக வருங்காலத்தை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கிறோம்; ஏனெனில் நாம் கையாளவேண்டிய சவால்கள் மிகப் பெரியவை,” என்றார் அவர்.
தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் பொருளியல் கொள்கைகளைப் பின்பற்ற அவர் மீண்டும் உறுதியளித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி, திரு பிரபாவோ இந்தோனீசியாவின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது துணை வேட்பாளரும் தற்போதைய அதிபர் விடோடோவின் மகனுமான 36 வயது ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா, நாட்டின் ஆக இளைய துணை அதிபராகப் பொறுப்பேற்பார்.
இவ்வேளையில், திரு பிரபோவோ அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அனைத்துலக விவகாரங்களில் இந்தோனீசியாவின் முனைப்பை உலகத் தலைவர்கள் தெளிவாக உணர முடியும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். குறிப்பாக, ஆசியான், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் என்று கருதப்படுகிறது.