ஜெருசலம்: காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீன அகதிகள் உள்ளனர்.
ராஃபா மீது தாக்குதல் நடத்தினால் உயிர்ச் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு நிலம் வழித் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் ராஃபாவில் ஹமாஸ் அமைப்பின் படைகள் இருப்பதாகவும் அவற்றை அழிக்க நிலம் வழித் தாக்குதல் அவசியம் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அடித்துக் கூறுகிறார்.
இதுகுறித்து இஸ்ரேலிய, அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வாரம் வாஷிங்டனில் சந்தித்துக் கலந்துரையாடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 19 இரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் மாண்டனர்.
காஸாவுக்கு அத்தியாவசியப் பொருள்களை லாரிகள் மூலம் கொண்டு வர உதவி செய்தோர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்தது.
இத்தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.