கெய்ரோ: ஹூதி படையினர், ஏடன் வளைகுடாவில் எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பல் மீது இரு ஏவுகணைகளைப் பாய்ச்சியது; கப்பல்களைக் குறிவைப்பதற்கென உள்ள அந்த ஏவுகணைகளில் ஒன்று, எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் (சென்ட்காம்) செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) தெரிவித்தது.
தாக்கப்பட்ட கப்பலில் யாரும் காயமுற்றதாகத் தெரியவில்லை என்று சென்ட்காம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. லைபீரிய தேசிய கொடியை ஏந்திய அந்த சுவிட்சர்லாந்துக் கப்பல், உதவி கேட்காமல் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பல தோதான கடற்படை ஏவுகணைகளைக் கொண்டு அக்கப்பலைக் குறிவைத்ததாக ஈரானின் பங்காளி அமைப்பான ஹூதி படையின் பேச்சாளர் ஒருவர் திங்கட்கிழைமையன்று (4 மார்ச்) கூறினார். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஹூதி படையினர், செங்கடலில் கப்பல்கள் செல்லும் பாதைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஹூதி படை, ஏமனிலிருந்து செங்கடலை நோக்கியும் ஓர் ஏவுகணையைப் பாய்ச்சியதாக அமெரிக்க ராணுவம் சொன்னது. ஆனால் அந்த ஏவுகணை நீரில் விழுந்ததாகவும் வர்த்தகக் கப்பல்களுக்கோ அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கோ சேதம் ஏதும் இல்லை என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது.