வாஷிங்டன்: இவ்வாண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்து அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகப் போட்டியிட ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்களிப்பு நடத்தப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதுவரை பல மாநிலங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறார். இரண்டாவது இடத்தில் ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி இருக்கிறார்.
டிரம்ப்புக்கு எதிராகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவருக்கு இருக்கும் ஆதரவு வலுவாக இருக்கிறது.
இந்நிலையில், அவர் அதிபர் போட்டியில் போட்டியிடாமல் இருக்க, மாநில வாக்களிப்புகளிலிருந்து அவரைத் தடை செய்ய சில மாநிலங்கள் முயன்று வருகின்றன.
இந்நிலையில், டிரம்ப்பைத் தடை செய்ய முயன்ற கொலராடோ மாநிலத்துக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிபர் தேர்தல் வாக்களிப்பிலிருந்து டிரம்ப்பை கொலராடோ மாநிலம் தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பு கொலராடோ மாநிலத்துக்கு என்றபோதிலும் டிரம்ப்புக்கு எதிராகச் செயல்படும் மற்ற மாநிலங்களுக்கும் அது பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப்பிற்கு மேலும் வலுசேர்த்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் வெற்றியைத் தந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
“எதிரணியைப் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அவருக்குத் தடை விதிப்பது சரியன்று,” என்று டிரம்ப் கூறினார்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கொலராடோ மாநில அரசு தெரிவித்துள்ளது.
மெய்ன், இலினோய் ஆகிய மாநிலங்களும் தேர்தலில் போட்டியிட டிரம்ப்புக்குத் தடை விதிக்க முயன்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“மாநில அரசாங்கப் பதவிகள் தொடர்பாக மாநில அரசுகள் தடைகளை விதிக்கலாம். ஆனால் கூட்டரசுப் பதவிகள், குறிப்பாக நாட்டின் அதிபர் தொடர்பான விவகாரங்களில் தடை விதிக்க அவற்றுக்கு அதிகாரம் இல்லை,” என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.