வாஷிங்டன்: கடற்கரை மணலில் குழி ஒன்றைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அந்த மணல் திடீரெனச் சரிந்து அதில் மூடப்பட்டதால் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் தென் ஃபுளோரிடா கடற்கரைப் பகுதி ஒன்றில் பிப்ரவரி 20ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தில், மணல் சரிந்து மூடியபோது 7 வயது சிறுவன் ஒருவரும் அதே குழியில் சிக்கிக்கொண்டதாக அறியப்படுகிறது.
ஆனால், அச்சிறுவன் உயிர் பிழைத்துக்கொண்டார்.
சிறுவன் தனது நெஞ்சுப்பகுதிவரை மணலில் புதைக்கப்பட்டதாகவும் சிறுவனுக்குக் கீழே சிறுமி முழுமையாகப் புதையுண்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்தோர் கூறினர்.
தீயணைப்பு மீட்புப் படையினர் வரும்வரை கடற்கரைக்கு வந்திருந்த பலரும் சிறுவர்களைக் காப்பாற்ற மணலைத் தோண்டினர்.
சிறுமியின் உடல் மணலிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோதே இதயத்துடிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.