அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
பிப்ரவரி 14ஆம் தேதி மதியம் நடந்த அந்த துப்பாக்கிச்சூடு பள்ளியில் நடந்துள்ள மற்றொரு துப்பாக்கி வன்முறைச் சம்பவம் என்று காவல்துறை கூறியுள்ளது.
பெஞ்சமின் இ.மேஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து சுடப்பட்டனர். இதில் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர். நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.
காயம் அடைந்த மூன்று ஆண் மாணவர்களின் வயது 17. மற்றொரு மாணவரின் வயது 18.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு சண்டை நடந்ததாகத் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்தைச் செய்தவர்களை கண்டுபிடிக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அட்லாண்டா பொதுப் பள்ளிகளின் காவல்துறைத் தலைவர் ரோனால்ட் அப்லின் கூறினார்.