ஜோகூர் பாரு: கடல்நாக ஆண்டு ஜோகூருக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்று அம்மாநில முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார்.
குறிப்பாக ஜோகூர் மன்னர் சுல்தான் இப்ராகிம், மலேசிய மாமன்னராகியுள்ள வேளையில் அம்மாநிலம் செழிக்கும் என்றார் அவர்.
2030ஆம் ஆண்டுக்குள் ஜோகூரை வளர்ச்சியடைந்த மாநிலமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் கனவை நனவாக்கும் நோக்கில் மாநில அரசாங்கம் இவ்வாண்டுக்கான பல திட்டங்களை வரைந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
“விரைவில் ஆர்டிஎஸ் ரயில் பாதை கட்டி முடிக்கப்படும். சிறப்பு பொருளியல் மண்டலமும் (எஸ்இஸி) அமைக்கப்படும். இத்தகைய திட்டங்கள் மாநிலம் வளர்ச்சியடைய உதவும்.
“கனவை நோக்கிப் பயணம் செய்யும் இவ்வேளையில், இன வேறுபாடின்றி ஒன்றுபட்டு நமது இலக்குகளுக்குப் பங்காற்றுமாறு அனைத்து ஜோகூர் வாசிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று திரு ஓன் ஹஃபிஸ் கூறினார். ஜோகூர் பாரு தியோங் ஹுவா சங்கத்தின் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் உரையாற்றினார்.
உலகளவில் பொருளியல் சவால்கள் நிலவிவரும் வேளையிலும் ஜோகூர் சிறப்பாகச் செய்து வருவதாகவும் வலுவடைந்து வருவதாகவும் திரு ஓன் ஹஃபிஸ் சொன்னார்.
“ஜோகூரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் பயணத்தை மேற்கொண்டுவரும் அதேவேளையில் மக்களின் நலனையும் நாங்கள் மறக்கவில்லை.
“இவ்வாண்டு இறுதிக்குள் மிகுந்த ஏழ்மைக்கு ஆளானோர் அறவே இல்லாமல் இருப்பதற்கு வகைசெய்யும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம்,” என்று திரு ஓன் ஹஃபிஸ் விளக்கினார். ஜோகூரில் 2,000 பேர் மிகுந்த ஏழ்மைக்கு ஆளாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிங்கே ஊர்வலத்தை ஐக்கிய நாட்டுச் சபை கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) உலக மரபு நிகழ்வாக வகைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குத் தமது மாநில அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என்று திரு ஓன் ஹஃபிஸ் சொன்னார்.
சிங்கே ஊர்வலத்தை யுனெஸ்கோ உலக மரபு நிகழ்வாக வகைப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜோகூர் பாரு தியோங் ஹுவா சங்கத்தின் தலைவர் ஹோ சோவ் தோங் முன்னதாக திரு ஓன் ஹஃபிசிடம் கேட்டுக்கொண்டார்.