இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆக அதிகமான இடங்களை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றினர்.
இருப்பினும், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசாங்கம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க இம்ரான் கானின் தஹ்ரிக் இ இசாஃப் கட்சி தீவிரமாக முயன்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும் கட்சியின் இடைக்காலத் தலைவருமான கோஹர் அலி கான் இதைத் தெரிவித்தார்.
இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிட அவரது கட்சிக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவு வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி இரவுக்குள் வெளியிடப்படவில்லை என்றால் தஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி அமைதி போராட்டம் நடத்தும் என்று திரு கோஹர் அலி கான் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக இம்ரான் கானும் அவரது அரசியல் எதிரி நவாஸ் ஷரிஃபும் தெரிவித்துள்ளனர்.