மாஸ்கோ: ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரமான லிசிசான்ஸ்க்கில் இருக்கும் வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றின் மீது உக்ரேனியப் படைகள் நடத்திய தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்திருப்பதாக ரஷ்யா கூறியது.
தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்தது.
இடிபாடுகளுக்கு அடியிலிருந்து 28 சடலங்களை மீட்டதாக ரஷ்யா தெரிவித்தது.
காயமடைந்த இருவரை ரஷ்ய மீட்புப் பணியினர் தூக்குப் படுக்கையில் வைத்து கொண்டுசெல்வதைக் காட்டும் காணொளியை ரஷ்ய அவசரநிலை அமைச்சு வெளியிட்டது.
காயமடைந்த பத்துப் பேரை தனது மீட்புப் பணியினர் காப்பாற்றியதாகவும் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் அமைச்சு கூறியது.
இதுகுறித்து, உக்ரேனிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா கூறியது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த கட்டடத்தில் பொதுமக்கள் பலர் இருந்ததாக அது தெரிவித்தது.