கெய்ரோ: ஏமனின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் இஸா துறைமுகத்தைக் குறி வைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் வான்வழியாக இரண்டு தாக்குதல்களை நடத்தியதாக ஹுதி அமைப்பின் அல்-மசிரா தொலைக்காட்சி கூறி உள்ளது.
இருப்பினும், இது தொடர்பான மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
செங்கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஏமனின் ஹுதி கிளர்ச்சிப் படையினர் அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் அதற்கு எதிராகக் களத்தில் குதித்தன.
கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய்க் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரியும் வகையில் ஹுதிப் படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
டிராஃபிகுரா வியாபார நிறுவனத்தின் சார்பாக இயக்கப்பட்ட மர்லின் லுவாண்டா என்னும் அந்தக் கப்பல் தீயில் சேதமடைந்ததாகவும் யாரும் காயமடைந்தது பற்றி தகவல் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது.
அந்தக் கப்பலைக் காப்பாற்றி மீட்கும் பணிக்கு அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்று உதவியதாகவும் அது தெரிவித்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த 8 மணி நேரத்திற்குப் பின் ஹுதி அமைப்பின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அமெரிக்க ராணுவம் அழித்ததாக ராணுவத்தின் மத்திய தளபத்தியம் டுவிட்டரில் தெரிவித்தது.