ஒட்டாவா: கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று சீக்கியப் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது கொலைக்கு இந்திய உளவுத்துறைதான் காரணம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார்.
அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கசந்தது.
இந்நிலையில், ஹர்தீப் சிங்கின் கொலை தொடர்பான விசாரணையில் இந்தியா தற்போது கனடாவுடன் ஒத்துழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருதரப்பு உறவு மேம்பட்டு வருவதாக கனடா தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோடி தாமஸ் தெரிவித்தார்.
ஹர்தீப் சிங்கின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கனடா கடந்த ஆண்டிலிருந்து அழுத்தம் தந்து வந்தது.
இதற்கிடையே, அமெரிக்காவில் சீக்கியப் பிரிவினைவாதி ஒருவரைக் கொல்ல தீட்டப்பட்ட சதித்திட்டத்தை முறியடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தனர்.