மெல்பர்ன்: ஆஸ்திரேலிய மாது ஒருவர், தனது 3 வயது மகனின் உள்ளாடைகளை வைத்திருந்த இழுப்பறையில் பாம்பைப் பார்த்துப் பதறிப்போனார்.
பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவரான மார்க் பெல்லி என்பவரின் உதவியை உடனடியாக அவர் நாடினார்.
ஐந்து அடி நீளமுள்ள ‘ஈஸ்டர்ன் பிரவுன் ஸ்னேக்’ எனப்படும் அந்தப் பழுப்பு நிறப் பாம்பு உலகில் இரண்டாவது ஆகக் கொடிய நச்சுப் பாம்பு வகையைச் சேர்ந்தது என்கிறார் பெல்லி.
சிறுவனின் ஆடைகளுக்கு இடையே அந்த இழுப்பறைக்குள் காணப்பட்ட பாம்பின் காணொளியை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பாம்பு எப்படி சிறுவனின் ஆடைகள் வைக்கப்பட்ட இழுப்பறைக்குள் சென்றது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
“உலர்ந்த துணிகளை தாயார் மடித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பாம்பு துணிகளுக்குள் புகுந்திருக்கவேண்டும். அதை அறியாமலே அப்பெண் தன் மகனின் இழுப்பறைக்குள் துணிகளை மடித்து வைத்துவிட்டார்,” என்று பெல்லி குறிப்பிட்டார்.
இணையத்தில் பரவிய அந்தக் காணொளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள் பாம்பை எப்படி அந்தத் தாயார் காணாமல் விட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐந்து அடி நீளமுள்ள பாம்பை எப்படி ‘தெரியாமல்’ மடித்து வைக்க முடியும்? அதன் எடையை அவர் உணரவில்லையா என்று கேட்டனர் இணையவாசிகள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த பெல்லி, “இந்த வகைப் பாம்புகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதவை. சிலர் இதைக் கைப்பைகளில், கடைகளில் வாங்கிய பொருள்கள் அடங்கிய பைகளில் சுமந்து சென்றதை நான் அறிவேன். இது யாருக்கும் நடக்கக்கூடியதே,” என்று கூறியிருக்கிறார்.