பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் தமது அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். புதிய அமைச்சரவை புரட்சிகரமானதாக இருக்க வேண்டும் என்று தமது அமைச்சர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்குப் பஞ்சம். இதனால் பாலினச் சமத்துவம், கொள்கைகள் தொடர்பாக மாற்றங்கள் ஏற்படுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
“வெறும் நிர்வாகத் திறன் கொண்ட அமைச்சர்கள் எனக்கு வேண்டாம். செயல் திறன் உள்ளவர்களே எனக்கு வேண்டும்,” என்று புதிய அமைச்சரவையின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் திரு மெக்ரோன் கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பிரான்ஸின் ஆக இளைய பிரதமரான கேப்ரியல் அட்டலும் கலந்துகொண்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
34 வயது திரு அட்டலைப் பிரதமராக நியமித்து, மக்கள் ஆதரவைப் பெற்று மீண்டும் அதிபராவதே திரு மெக்ரோனின் இலக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், புதிய அமைச்சரவை குறித்து திரு மெக்ரோன் எடுத்த முடிவு முரண்பாடு மிக்கது என்று பரவலாகப் பேசப்படுகிறது.
அமைச்சரவையில் இடம்பெறுபவர்களில் பலர், பழைய அமைச்சர்களே.
நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், தற்காப்பு அமைச்சர் ஆகியோர் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.