குவிட்டோ: எக்குவடோரில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஒளிபரப்பு அறையில், நிகழ்ச்சி ஒன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது திடீரென்று முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரர்கள் ஒளிபரப்பு அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அதிர்ச்சியடைந்த ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி அவர்கள் மிரட்டுவதைத் தொலைக்காட்சியில் பலர் பார்த்து பதற்றம் அடைந்தனர்.
ஊழியர்களை அந்தத் துப்பாக்கிக்காரர்கள் தரையில் குப்புற படுக்கவைத்தனர்.
துப்பாக்கிக்காரர்கள் அங்கிருந்த பல ஊழியர்களைப் பிணைபிடித்து தங்களுடன் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டதாக எக்குவடோர் காவல்துறை கூறியது.
ஊழியர்கள் இருவர் காயமடைந்ததாக தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேரைக் கைது செய்திருப்பதாக எக்குவடோர் காவல்துறை தெரிவித்தது.
அண்மையில், எக்குவடோரில் சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த ஆபத்துமிக்க குற்றவாளி சிறையிலிருந்து தப்பினார். அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு 60 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
அவசரநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு அறையில் நடந்த சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, எக்குவடோரில் ஏற்பட்டுள்ள குழப்பங்களும் அங்கு நிகழும் வன்முறைச் சம்பவங்களும் தனது நாட்டிற்குள் வராமல் இருக்க, அண்டை நாடான பெருவின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எக்குவடோருடனான எல்லைப் பகுதியில் காவல்துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
எக்குவடோரில் நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எக்குவடோர் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் தேவைப்பட்டால் உதவி வழங்க தயாராக இருப்பதாகவும் அது கூறியது.