துபாய்: ஈரானில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏறக்குறைய 100 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கொல்லப்பட்ட புரட்சிகர ராணுவப் படைத் தளபதி காசிம் சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் கெர்மான் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஈரானிய அதிகாரிகள் கூறினர்.
மனிதாபிமானமற்ற, கொடூரத் தாக்குதல் இது என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைஸி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஈரானின் உச்சமன்றத் தலைவர் ஆயத்துல்லா கமேனி, இந்த இரட்டைக் குண்டு வெடிப்புக்குப் பழிதீர்க்கப் போவதாக சபதம் எடுத்துள்ளார்.
“கொடூரமான குற்றம் நிகழ்ந்துள்ளது. இப்போதிலிருந்து தங்களுக்குப் பலத்த அடி விழும் என்பதை இதைச் செய்தவர்கள் உணரவேண்டும். கடுமையாகப் பதிலடி தரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்று திரு கமேனி தனது அறிக்கையில் கூறியதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
ரஷ்யா, துருக்கி போன்றவை உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்த வெடிகுண்டுத் தாக்குதலைக் கண்டித்துள்ளன.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 என்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 211 என்றும் ஈரானிய சுகாதார அமைச்சர் பஹ்ரம் எய்னொல்லாஹி அரசாங்கத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
மாண்டோர் எண்ணிக்கை 103 என்று இதற்கு முன்னர் சொல்லப்பட்டது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு வரலாற்றில் நிகழ்ந்துள்ள ஆகக் கொடூரமான தாக்குதல் என்று இச்சம்பவம் கருதப்படுகிறது.
தனது எல்லைக்குட்பட்ட பகுதிகள் அல்லது தனிப்பட்ட மனிதர்கள் மீது தாக்குதல் நடந்தபோதெல்லாம் இஸ்ரேல் மீது ஈரான் பழிபோடுவதும் அதற்குப் பதில் சொல்லாமல் இஸ்ரேல் அமைதிகாப்பதும் வழக்கம்.
ஆயினும், தற்போது கல்லறையில் நிகழ்ந்துள்ள வெடிப்புச் சம்பவங்களில் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததற்கான அறிகுறி இல்லை.
அமெரிக்காவும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளது. வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இஸ்ரேல் இருந்ததற்கான தடயம் இல்லை என்று வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்புப் பிரிவு பேச்சாளர் ஜான் கிர்பி கூறினார்.