மணிலா: தென்சீனக் கடலில் பதற்றம் அண்மைய மாதங்களில் தணிந்திருப்பதைவிட, அதிகரித்துள்ளது என்றும் அதிக பிடிவாதமான சீனா அதன் ஆசிய அண்டை நாடுகளுக்குப் பெரிய சவாலாக அமைந்துள்ளது என்று பிலிப்பீன்ஸ் அதிபர் அதிபர் ஃபெர்டினென்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய ஊடகத்துக்கு டிசம்பர் 16ஆம் தேதி அளித்த நேர்காணலில், “ஒத்த எண்ணம் கொண்ட நட்பு நாடுகளுடன் வலுவான கூட்டணி அமைய வேண்டும். அது பிலிப்பீன்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் வலுவான முத்தரப்புக் கூட்டணி போன்றதாக இருக்க வேண்டும்,” என்று திரு மார்கோஸ் வலியுறுத்தினார்.
திரு மார்கோஸ், தோக்கியோவில் நடைபெறும் ஜப்பான்-ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
டிசம்பர் 10ஆம் தேதி, மணிலாவும் பெய்ஜிங்கும் தென்சீனக் கடலின் உள்ள ஆழம் குறைவான கடற்பகுதியில் தங்கள் கப்பல்கள் மோதிக்கொண்டது குறித்து ஒன்றை ஒன்று குறைகூறின. அந்த முக்கியமான ஆழம் குறைவான கடற்பகுதிக்கு இரு நாடுகள் உரிமை கோருகின்றன.
இதைத் தவிர, ஆசியான் உறுப்பு நாடுகளான வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா, புருணை ஆகியவையும்கூட சீனா உரிமை கொண்டாடும் தென்சீனக் கடலில் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.
US$3 டிரில்லியனுக்கும் (S$4 டிரில்லியன்) அதிகமான வருடாந்திர கப்பல் வர்த்தகத்திற்கான தென்சீனக் கடலின் அந்த வழித்தடம் தனக்குத்தான் முழுமையாகச் சொந்தம் என்று சீனா கூறிவருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் நிரந்தர நடுவர் நீதிமன்றம், சீனாவின் கோரிக்கைகளுக்கு ஆதாரபூர்வமான அடிப்படைக் காரணங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை அமெரிக்கா ஆதரித்தாலும் சீனா அதை நிராகரித்தது.
“இரு நாடுகளுக்கு இடையே அமைதியும் முறையான தொடர்பும் நிலைத்திருக்க அனைத்து நாடுகளும் தொடர்ந்து சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும்.
“சீனா இதன் தொடர்பின் புதிய தீர்வுகளை எதிர்பார்க்கிறது. கப்பல்களின் மோதலுக்குப் பிறகு தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனா தனது உரிமையை நிலைநிறுத்த உறுதி பூண்டுள்ளது. இதை மணிலா, தீவிரமான உரிமை போராட்டமாகப் பார்க்கிறது,” என்று அதிபர் மார்கோஸ் விவரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.