அடிலெய்ட்: தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடுமையான புயலுக்கு இடையே மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அடிலெய்ட் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிவாக்கில் 7,000க்கும் அதிகமான குடியிருப்புகளில் மின்சாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னர் புயலுடன் சக்திவாய்ந்த மின்னல்கள் அடிலெய்ட் வட்டாரத்தில் தோன்றின. அதனால் 14,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை அடிலெய்ட் நகரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் 10 முதல் 20 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியிருந்தது.
தென்கிழக்கு பகுதிகளிலும் பிரவுன்ஹில் கிரீக் பகுதியிலும் ஒரு மணி நேரத்தில் மட்டும் 45.8 மில்லிமீட்டர் மழை பதிவானது.
மோசமான வானிலை காரணமாக வீடுகள் பல சேதமடைந்தன. முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை பயணங்களைத் தவித்தனர். விமானப் பயணங்களும் ஒத்திவைக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை முழுவதும் அதிக அளவில் இடிகள் பதிவாகக்கூடும் என்று ஆஸ்திரேலிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது. கடுமையான மழையால் சில பகுதியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கேட்டுக்கொண்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளைத் தவிர்க்கவும், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.