சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் நவம்பர் 17ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.
உலகில் கூடுதல் ஒத்துழைப்பு அவசியமாகத் தேவைப்படுகிறது என்பதன் அறிகுறியாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது என்றார் அனைத்துலக பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
“புவிசார் பொருளியல் சிதைவால் துரித வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தொடர்பில் பாதகமான பின்விளைவுகள் அதிகரித்துவிட்டன. இந்த வேளையில் முக்கியமானதாக பைடன், ஸி சந்திப்பு அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார் அவர்.
“எந்த ஒரு நாடும் தனித்து வெற்றி காண முடியாத சவால்கள் தொடர்பில் உலகநாடுகள் ஒத்துழைப்பு நல்க வழிதேட வேண்டும் என்பதற்கு இந்தச் சந்திப்பு ஓர் அறிகுறி,” என்றார் திருவாட்டி ஜியோர்ஜிவா.
அனைத்துலக பொருளியல் நிச்சயமற்ற ஒரு நிலையில் இருக்கும்போது இரு தலைவர்களுக்கிடையே மீண்டும் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வது முக்கியம் என்று சுட்டினார் அவர்.