கெடா: கணிக்க முடியாத வானிலை, விதை நெல்லின் விலையேற்றம் காரணமாக இன்னும் ஐந்து மாதங்களில் மலேசியாவில் வெள்ளை அரிசிக்குக் கடும் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள மோசமான வானிலை, விவசாயிகளை விழிப்புடன் இருக்க வைத்துள்ளது.
விதை நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது விவசாயிகள் எதிர்நோக்கும் மற்றொரு சவால்.
இதை ஒரு இக்கட்டான நிலவரம் என்று வர்ணிக்கும் வட மலேசிய விவசாயிகள், உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக கெடா, பெர்லிஸ், பினாங்கு மாநிலங்களில் விவசாயிகள் இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
இதைச் சமாளிக்க செயல்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகளில், அரிசி உற்பத்தியில் கடும் கண்காணிப்பும் கட்டுப்பாடும் அடங்கும் என்று பினாங்கு உணவுப் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மேம்பாட்டுக் குழுத் தலைவர் ஃபஹ்மி ஸைனுல் கூறினார்.
உற்பத்தி ஆலைகளில் விதை நெல் விநியோகத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் அளவு போதுமானதாக இருப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என்றார் அவர்.
விதை நெல் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய பினாங்கில் பண்ணைகளை அமைப்பது தொடர்பில் மாநில வேளாண் துறை விண்ணப்பங்களை விரைவுபடுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.