வாஷிங்டன்: இண்டியானாவில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் இந்திய மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வருண் ராஜ் பூச்சா என்ற அந்த 24 வயது இந்திய மாணவரை அக்டோபர் 29ஆம் தேதியன்று 24 வயது ஜோர்டன் ஆண்ட்ரேட், தலையில் கத்தியால் குத்திய காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருண் இறந்துவிட்டதை அவர் பயின்ற பல்கலைக்கழகம், புதன்கிழமையன்று அறிவித்து அதன் அனுதாபங்களை வருணின் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொண்டது.
கணினி அறிவியல் துறை தொடர்பான படிப்புக்காக வருண் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றதாக அறியப்படுகிறது. அடுத்த ஆண்டு படிப்பை முடித்து அவர் தாய்நாடு திரும்புவதாக இருந்தது.
தாக்குதலுக்குப் பிறகு வருண் அவரின் உடலின் ஒரு பக்கத்தை மட்டும் அசைக்க முடிந்ததாகவும் இறக்கும்வரை அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும் அவரின் உறவினர் ‘ஏபிசி7 சிகாகோ’ நிறுவனத்திடம் கூறினார்.