புத்ராஜெயா: பள்ளியில் பகடிவதை, தாக்குதலுக்குள்ளாகி செவித் திறனை இழந்த மாணவருக்கு 600,000 ரிங்கிட் (173,754 சிங்கப்பூர் வெள்ளி) இழப்பீடாக வழங்கக் கூட்டரசு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திரங்கானுவில் 2015ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது. அப்போது 14 வயதாக இருந்த அந்த முன்னாள் மாணவர் அடித்து துன்புறுத்தப்பட்டு கிண்டல் செய்யப்பட்டார். அதனால் அவரது வலது செவிப்பறை கிழிந்து, அவர் கேட்கும் திறனை இழந்தார்.
அத்துடன், கடுமையான மனஅழுத்தத்துக்கும் உள்ளானதால் அவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்பட்டது.
அதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து மாணவர்கள், பள்ளி முதல்வர், கல்வித் துறை தலைமை இயக்குனர், அரசாங்கம் ஆகியோர் மீது மாணவரின் தந்தை 2017ல் வழக்குத் தொடர்ந்தார்.
சம்பவத்திற்குப் பள்ளியின் ஐந்து முன்னாள் மாணவர்கள், பள்ளியின் காப்பாளர், மாணவர் விவகார ஆசிரியர், தலைமையாசிரியர், மலேசிய அரசாங்கம், கல்வித்துறை தலைமை இயக்குநர் அனைவருமே பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அனைத்து பிரதிவாதிகளும் இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கோலா திரங்கானு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்ட கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவையும் தள்ளுபடி செய்தது.