சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், பூர்வகுடியினருக்கான சிறப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் தோல்விக்குத் தானும் பொறுப்பேற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
தமது அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யக்கூடிய அந்தத் தோல்வி குறித்து திங்கட்கிழமை அவர் கருத்துரைத்தார்.
கடந்த சனிக்கிழமை (அக். 14) இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 60 விழுக்காட்டிற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் பூர்வகுடியினருக்கான சிறப்பு அமைப்பை ஆதரிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அரசமைப்புச் சட்டத்தில் பழங்குடியின மக்களை அங்கீகரிக்கும் வகையில் திருத்தம் செய்வதா வேண்டாமா என்பது பற்றி அந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பில் ஆதரவு கிட்டியிருந்தால் அதற்காக சிறப்பு ஆலோசனை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பிரதமர் அல்பனிஸ் அந்தப் பொது வாக்கெடுப்பை நடத்தினார்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை நடந்த 45 பொது வாக்கெடுப்புகளில் எட்டு மட்டுமே வெற்றிபெற்றன. அந்த எட்டும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டாலும் ஆதரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.