பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் லாகூர் நகரில் கைதானார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான அன்பளிப்புப் பொருள்களைச் சட்ட விரோதமாக விற்றதற்காக அவருக்கு ஒரு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதனை அடுத்து அவர் கைதானார்.
பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வேண்டும். இம்ரான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதால் அவர் அந்தத் தேர்தலில் போட்டி இட முடியாமல் போகலாம் என்று சட்டத் துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இம்ரான் கான் ஐந்து ஆண்டு காலம் அரசியல் பதிவிகளை அவர் வகிக்க இயலாது என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சிக்குத் தலைவரான இம்ரான் கான், 70, மாவட்ட நீதிமன்றம் வழங்கி இருக்கும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டதாக அவரின் கட்சி அறிக்கை ஒன்றில் கூறியது.
தீர்ப்பு வெளியானதுமே லாகூரில் இருக்கும் கானின் இருப்பிடத்தை காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்துவிட்டதை நேரில் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. உள்ளூர் ஊடகமும் அவ்வாறே கூறின. அமைதி காக்கும்படி இம்ரான் கான் கட்சியினரைக் கேட்டுக்கொண்டார்.
இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானின் பிரதமராக ஆட்சி புரிந்தார். அப்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான அன்பளிப்புப் பொருள்களைச் சட்டவிரோதமாக அவர் விற்றுவிட்டார் என்று புகார் தாக்கலானது.
அதை தேர்தல் ஆணையம் விசாரித்தது. கான் குற்றவாளி என்று ஆணையம் முடிவு செய்தது. இதன் தொடர்பில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தான் எந்த தவறும் செய்யவில்லை என்று இம்ரான் கான் மறுத்து வருகிறார்.
இம்ரான் கான் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய உலகளாவிய புகழ்பெற்றவர். பிறகு அரசியலில் ஈடுபட்டு பிரதமராக ஆனவர்.
தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது கிடைத்த பரிசுப் பொருள்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவையாக இருந்தன.
இம்ரான் கான், பிரதமர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அந்தப் பொருள்களை வாங்கி, விற்று இருக்கிறார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. பரிசுப் பொருள்களின் மதிப்பு 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்க்கும் (S$666,000) அதிகம் என்பது தெரியவந்தது.
இம்ரான் கானுக்கு ரூ.100,000 ($451) அபராதமும் விதிக்கப்பட்டது.
இம்ரான் கான் 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்ற ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
பிரதமர் பதவியை இழந்தது முதல் இம்ரான் கானுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவை எல்லாம் அரசியல் நோக்கத்தோடு இடம்பெற்றவை என்று இம்ரான் கான் குறைகூறி வந்தார்.
பல மாதங்களாக தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்துக்கொண்டே வந்தார் இம்ரான் கான். அவருடைய ஆதரவாளர்கள் அப்போதைக்கு அப்போது ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
ஒரு வழக்கு விசாரணையில் முன்னிலையாக வேண்டும் என்று மே மாதம் அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு இம்ரான் கான் கீழ்படியவில்லை.
அதைத் தொடர்ந்து கைதானார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இம்ரான் கான் விடுவிக்கப்ப்டடார்.
பாகிஸ்தான் அரசியலில் அந்த நாட்டு ராணுவம் பெரும் பங்கு வகிக்கிறது. சில நேரங்களில் ராணுவப் புரட்சி மூலம் அது ஆட்சியைக் கைப்பற்றியும் இருக்கிறது.
இதர காலகட்டங்களில் அது பின்னணியில் இருந்து ஆட்டி வைக்கிறது.
ராணுவத்தின் உதவினால்தான் 2018ல் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று பகுப்பாய்வாளர்கள் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அவர் ராணுவத்தைப் படுமோசமாகக் குறைகூறி வந்திருக்கிறார்.
நாட்டில் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்று திரு கான் குரல்கொடுத்து வந்தார். ஆனால், அவர் குற்றவாளியாக தீர்ப்பு வெளியாகி இருப்பதால் அநேகமாக இம்ரான் கான் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.