மா சாய், தாய்லாந்து: வடதாய்லாந்தில் வெள்ளக்காடான குகையிலிருந்து 12 இளம் காற்பந்து ஆட்டக்காரர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நூற்றுக்கணக்கானோர் திங்கட்கிழமை குகையில் ஒன்றுதிரண்டனர்.
தங்களை மீட்க 18 நாள்கள் இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கானோருக்கு பதின்ம வயதினரான அந்தச் சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரான திரு எக்கபோல் சந்தவோங்கும் நன்றி தெரிவித்தனர்.
2018 ஜூன் மாதம் அந்தக் காற்பந்துக் குழுவினர் குகைக்குள் நுழைந்தபோது வெள்ளநீர் புகுந்ததில் அவர்கள் அங்கு சிக்கித் தவித்தனர்.
“இந்த மக்கள் மட்டும் இல்லையென்றால் நாங்கள் உயிர்பிழைத்திருக்க மாட்டோம். உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் திரு எக்கபோல்.
எனினும், ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் மகிழ்ச்சியான நிகழ்வில் ஒருபக்கம் சோகமும் நிலவியது.
இவ்வாண்டு முன்னதாக காற்பந்து உபகாரச்சம்பளத்தில் பிரிட்டனுக்குச் சென்றிருந்த 17 வயது காற்பந்துக் குழுத் தலைவர் துவாங்பெச் புரோம்தெப் மரணம் அடைந்ததே அதற்குக் காரணம்.