நுசா டுவா (இந்தோனீசியா): சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் இந்தோனீசியாவின் பாலி தீவில் நடைபெறும் ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் சந்திப்பில் ரஷ்யா கலந்துகொள்கிறது.
வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த சந்திப்பில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் சர்ஹெய் லவ்ரோவ் கலந்துகொள்கிறார். உக்ரேன் போரை மையமாகக் கொண்டு சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேன் போரால் உலகில் உணவு நெருக்கடி நிலவி வருகிறது. உலக அரசியல் சூழலிலும் நெருக்கடி எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அவற்றின் தொடர்பில் பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டு சந்திப்பை சீராக நடத்தும் சவாலை இந்தோனீசியா எதிர்நோக்குகிறது.
உக்ரேன் மீது படையெடுத்ததன் தொடர்பில் இந்த சந்திப்பை ரஷ்யா சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் எனலீனா பெர்பொக் கூறியிருந்தார். அனைத்துலக சட்டங்களை மதிப்பதுடன் அனைவரும் அவற்றுக்கு இணங்க நடந்துகொள்வதை உறுதிசெய்யவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகு திரு லவ்ரோவ் பலரின் கண்டனத்திற்கு ஆளானார். கண்டனம் தெரிவித்த பலரை அவர் முதன்முறையாக நேரில் சந்திக்கிறார்.
இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்புகளைப் போல் பாலியில் நடைபெறுவது இருக்காது என்று ஐரோப்பிய, அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியிருந்தனர்.
ஜி-20 சந்திப்பில் ரஷ்யா பங்கேற்பதால் அதில் தாங்கள் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தன. ஆனால் அதுவே ரஷ்யாவிற்கு சாதகமாக அமையக்கூடும் சாத்தியம் இருந்ததால் மேற்கத்திய நாடுகள் பங்கேற்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு குறித்தும் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நாள் ஜி-20 சந்திப்பு இன்றுடன் நிறைவடையும்.
பாலியில் நடைபெறும் சந்திப்பு உக்ரேன் விவகாரத்தை மையமாகக் கொண்டிருக்கும்