இந்தியாவில் கொவிட்-19 கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் மே 15ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அண்மையில் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
இதற்கிடையே பல பயணிகள் தடைகளை மீறி இந்தியாவிலிருந்து வேறு வழிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சி எடுத்துள்ளனர்.
டோஹா மூலம் இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் குடிநுழைந்ததை அடுத்து இப்பிரச்சினை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து ‘கத்தார் ஏர்வேஸ்’ நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா பயணிகள் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
அத்துடன் இந்தியாவிலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் வழியாக வரும் பயணிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறுக்குவழிகளைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வருவதைத் தடுப்பதற்கான மற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார்.