யங்கூன்: மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுப்புக் காவலில் இருக்கும் மியன்மாரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியைச் சந்திக்க, கம்போடிய முன்னாள் தலைவர் ஹுன் சென் விடுத்த கோரிக்கையை மியன்மாரின் ராணுவ ஆட்சி புதன்கிழமை (மே 8) நிராகரித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற 78 வயதான திருவாட்டி சூச்சி உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரைச் சந்திக்க வெளிநாட்டுத் தலைவர்கள், அரசதந்திரிகளின் பல கோரிக்கைகளை ராணுவ ஆட்சிக்குழு நிராகரித்துள்ளது.
கம்போடியாவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த திரு ஹுன் சென், 2023ல் பதவி விலகுவதற்கு முன்னர், மியன்மாரின் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்குடன் நடத்தப்பட்ட காணொளிப் பேச்சுக்களின்போது திருவாட்டி சூச்சியுடன் ஒரு சந்திப்பைக் கோரியதாக செவ்வாய் அன்று கூறினார்.
ராணுவத்தின் தகவல் குழு வெளியிட்ட வானொலி அறிக்கையில், “இந்த நேரத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்ய எந்தக் காரணமும் இல்லை” என்று பேச்சாளர் சாவ் மின் துன் கூறினார்.
ராணுவம் வாக்குறுதியளித்த தேர்தலை நிச்சயம் நடத்தும் என்று கூறிய அவர், அது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
27 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் திருவாட்டி சூச்சி, ராணுவத்தால் கட்டப்பட்டத் தலைநகரான நேபிடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ள நிலையில், அவருக்கு “தேவையான கவனிப்பு” அளிக்கப்படுவதாக ராணுவம் கூறியுள்ளது.