காபூல்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு 17 வீராங்கனைகளை அனுப்பவுள்ளதாக ஆப்கானிஸ்தானின் ஒலிம்பிக் குழுத் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் இயக்கம் அரசாங்கப் பொறுப்பேற்றப் பிறகு பெண்கள் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் பல முக்கிய வீராங்கனைகள் துன்புறுத்தலுக்குப் பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர்.
பெண்களையும் இளம் வீராங்கனைகளையும் பாதுகாப்பான விளையாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த டிசம்பர் மாதம் அனைத்துலக ஒலிம்பிக் குழு ஆப்கானிஸ்தானிடம் வலியுறுத்தியது.
“ஆசிய விளையாட்டு அரங்கில் ஆப்கானிஸ்தானைப் பிரதிநிதிக்க இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான வீராங்கனைகளை ஆப்கானிஸ்தான் அனுப்பவுள்ளது எனவும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் பிரகாசமாக ஒளிர்வார்கள்,” எனவும் ஆப்கானிஸ்தானின் ஒலிம்பிக் குழு செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் திடல்படப் போட்டி, மிதிவண்டி ஓட்டுதல், கைப்பந்து ஆகிய மூன்று பிரிவுகளில் மொத்தம் 17 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கிறது.