மாலே: மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முகம்மது முய்சு, அந்நியப் படைகள் தம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அங்கு இம்மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான முகம்மது முய்சு வாகை சூடினார்.
இந்தத் தேர்தலில் சீன, இந்திய ஆதரவு வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.
சீன ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதால் மாலத்தீவுடான இந்தியாவின் உறவில் உரசல் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, சீனாவுடனான உறவை மாலத்தீவு புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அந்நிய நாட்டு ராணுவப்படைகள் மாலத்தீவைவிட்டு வெளியேற வேண்டும்,” என நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல் திங்கட்கிழமை நடந்த வெற்றிப் பேரணியில் தன் ஆதரவாளர்களுக்கு இடையே உரையாற்றும்போது அவர் கூறினார்.
தற்போது அதிபராக இருக்கும் இப்ராகிம் சோலிஹை இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தோற்கடித்த திரு முய்சு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இராணுவத்தின் ஒரு சிறிய பிரிவுக்கு எதிராக மாலத்தீவில் நடைபெற்ற ‘இந்தியா அவுட்’ என்னும் பிரசாரத்தை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் நாட்டின் கொள்கைக்கு உடன்படும் அனைத்து நாடுகளும் எங்கள் நெருங்கிய நண்பர்கள். அந்நாடுகள் எங்களின் நட்பு நாடுகளாக இருக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.