வாஷிங்டன்: காஸா பகுதியில் நடந்துவரும் போர் ஒரு முடிவுக்கு வந்ததும், அமைதியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டுக்கும் புதிய தலைமைத்துவம் தேவை என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் கூறியிருக்கிறார்.
குறிப்பாக, இரு நாடுகளுக்குமான தீர்வாக அது அமையவேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கில் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி துப்பாக்கிக்காரர்களால் எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்போது, இஸ்ரேலின் ஆக நீண்டகாலத் தலைவரான பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு நெருக்குதலுக்கு ஆளாவார் என்று கூறப்படுகிறது.
கிட்டத்த்தட்ட 1,400 பேர் கொல்லப்பட்டதாகவும், 240க்கும் மேற்பட்டோர் பிணைப்பிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இதையடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி சம்பவத்திற்குப் பதிலடியாக, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதியை இஸ்ரேல் தாக்கியது.
காஸாவில் இதுவரை 10,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.
இரு நாட்டுத் தீர்வுக்குத் திரு நெட்டன்யாஹு ஒத்துழைப்பாரா என்ற கேள்விக்கு, அதனைக் காட்டும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தாம் நினைப்பதாகத் திருவாட்டி கிளின்டன் கூறினார். இஸ்ரேல் மக்கள் அவரது தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்கவேண்டும் என்றார் அவர்.
இஸ்ரேல் அரசாங்கம் ஹமாஸ் குழுவை அழிக்கப்போவதாகச் சூளுரைத்துள்ளது. அதன் உத்திகளில் வெடிகுண்டு தாக்குதல்களும் அடங்கியுள்ளன.
ஹமாசுக்கு நன்மை அளிக்கக்கூடிய சண்டைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் சாத்தியம் குறைவு என்றபோதும், காஸா மக்களுக்கு உதவி சென்றுசேர அது தாக்குதல்களை அவ்வப்போது நிறுத்திவைக்கக்கூடும் என்று திருவாட்டி கிளின்டன் கூறினார்.