ரியாத்: சவூதி அரேபியாவில் வாகனம் ஓட்டும் முதல் பெண்களில் ஒருவர் ஜவாரா அல்-வபிலி. ஐந்து ஆண்டுகளுக்குமுன் பெண்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதும் வாகனம் ஓட்டத் தொடங்கியவர் 55 வயது திருவாட்டி வபிலி.
அவரைப் பொறுத்தவரை அது புரட்சிகரமான ஒரு சீர்திருத்தம். போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத ஒரு நாட்டில் வாகனம் ஓட்டும் திறன் அத்தியாவசியமானது என்பது அவரது கருத்து. அவர் மற்ற பெண்களுக்கு வாகனம் ஓட்ட இலவசமாகக் கற்றுத் தருகிறார்.
பெண்களுக்கு அண்மை ஆண்டுகளில் அதிக உரிமைகள் கிடைத்திருப்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். தூதர்கள், வங்கி இயக்குநர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், விண்வெளி ஆய்வாளர்கள் என பல்வேறு பணிகளில் பெண்கள் காணப்படுகின்றனர்.
ஆனால், இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து மனித உரிமை இயக்கத்தினர் சிலர் ஐயம் எழுப்பியுள்ளனர்.
“சிறையில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அபாயா அணியாததற்காக, அல்லது பொது இடத்தில் நடனமாடியதற்காக அல்லது வேலையின்மை உட்பட எதைப்பற்றியாவது தங்கள் கருத்துகளை டுவீட் செய்ததற்காக,” என்றார் ALQST உரிமைக் குழுவின் கண்காணிப்பு, தொடர்புப் பிரிவின் தலைவர் திருவாட்டி லீனா அல்-ஹத்லூல்.
“என்ன நடக்கிறது என்பது தெரியாமல், அல்லது ஒன்றைச் செய்ய அனுமதி உண்டா இல்லையா என்பது தெரியாமல் நாங்கள் எப்போதும் அச்சத்திலேயே இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.