சிங்கப்பூரில் பிறந்த நகைச்சுவைக் கலைஞர், நிகழ்ச்சி ஒன்றின்போது தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனதைப் புண்படுத்தும் வகையில் திருவாட்டி ஜோஸ்லின் சியா (படம்) பேசியதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனனும் அடங்குவர்.
அண்மையில் அமெரிக்காவில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான போட்டித்தன்மையை நையாண்டி செய்யும் வகையில் பேசப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி சியா, மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்து பேசினார்.
அந்த விமானம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கிப் பறந்துகொண்டிருந்தபோது மாயமானது.
அதைத் தேட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இன்றுவரை அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மாண்டுவிட்டதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரின் உணர்வுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் வகையில் திருவாட்டி சியா பேசினார். இவற்றைக் காட்டும் 89 வினாடி காணொளி இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
“ஜோஸ்லின் சியாவின் கருத்துகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அவருடைய இந்தக் கருத்துகள் சிங்கப்பூரர்களின் கருத்துகள் அல்ல. மலேசியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கிடையிலான உறவுக்கு சிங்கப்பூரர்கள் மதிப்பளிப்பவர்கள். மனதைப் புண்படுத்தும் இந்தக் கருத்துகளால் மலேசியர்கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் டுவிட்டரில் நேற்று பதிவிட்டார்.
திருவாட்டி சியா தற்போது சிங்கப்பூரர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.