விசாக தின வாரயிறுதியில் (இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதி வரை) உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய சோதனைச் சாவடிகளை ஏறத்தாழ 1.5 மில்லியன் பேர் கடந்தனர். இந்தத் தகவலை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று வெளியிட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலைகாரணமாக மூடப்பட்டிருந்த சிங்கப்பூர்-மலேசியா எல்லை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வாண்டு விசாக தின நீண்ட வாரயிறுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இவ்விரு சோதனைச் சாவடிகளையும் ஆக அதிகமானோர் கடந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, இம்மாதம் 1ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக 250,000க்கும் அதிகமானோர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சென்றனர். விசாக தின வாரயிறுதியுடன் ஜூன் மாதப் பள்ளி விடுமுறையுமாக இருப்பதால் அதிக அளவிலான பயணிகள் சோதனைச் சாவடிகளைக் கடந்ததாக ஆணையம் தெரிவித்தது. இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக அது கூறியது.
பெரும் அளவில் திரண்ட பயணிகளுக்குக் கூடுதல் பேருந்துச் சேவைகளை வழங்க நிலப் போக்குவரத்து ஆணையம், இருநாடுகளுக்கும் இடையே பேருந்துச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டது.
சோதனைச் சாவடிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரிகளை ஆணையம் பணி அமர்த்தியது. சோதனைச்சாவடிகளில் இருந்த போக்குவரத்து நிலவரம் குறித்து அடிக்கடி தகவல் தெரிவித்தது.