இர்ஷாத் முஹம்மது
மதிப்புமிகு நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் மூத்த சமூக சேவையாளருமான ஆ. பழனியப்பன் (படம்) நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73.
நாடாளுமன்றக் கூட்டங்கள், வரவுசெலவுத் திட்டம், பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை போன்ற முக்கிய அரசாங்க நிகழ்வுகளில் நேரடி மொழிபெயர்ப்பு, எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பு, அமைச்சுகளின் புதிய சொல்லாக்கம் என அரசாங்க மொழிபெயர்ப்புத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாகப் பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கும் திரு பழனியப்பன் நாடாளுமன்றத்தின் மொழிச் சேவைகள் பிரிவுத் தலைமை வல்லுநராக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வுபெற்றார்.
பின்னர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர், தேசிய கல்விக்கழக விரிவுரையாளர் எனக் கல்வியாளராகப் பணிபுரிந்த அவர் தனிப்பட்ட மொழி பெயர்ப்புச் சேவையையும் நடத்திவந்தார்.
தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தமிழ்மொழிவளக் குழுவின் தலைவர், வளர்தமிழ் இயக்க செயற்குழு உறுப்பினர் எனத் தமிழ்மொழி சார்ந்த பணிகளை ஆற்றிய அவர் சமய, சமூகத் துறைகளிலும் பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தில் 1967ல் இருந்து 1982 வரை உறுப்பினராக இருந்த திரு பழனியப்பன், தன்னை முன்னிலைப்படுத்தாத தன்னலமற்ற சமூகப் பணியாளர் என்று அவரது பள்ளிக்கால நண்பரான முனைவர் அ. வீரமணி கூறினார்.
எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் பன்முகத் திறனாளரான திரு பழனியப்பனின் மறைவு சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்திற்குப் பேரிழப்பு என சமூகத்தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.
“சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அதன் முக்கிய அங்கத்தினர் ஒருவரை இழந்துவிட்டது,” என்றார் மூத்த தமிழறிஞரான டாக்டர் சுப. திண்ணப்பன்.
“1982ல் நான் சிங்கப்பூர் வந்தது முதல் பழனியப்பனுடன் அணுக்கமான நட்பு இருந்தது. யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவும் நல்லுள்ளம் படைத்தவர் அவர். சிங்கப்பூரில் தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கி தமிழ் அகராதியை உருவாக்கியதில் முதன்மைப் பணியாற்றியவர்,” என்றார் அவர்.
“திரு பழனியப்பன் தலைமையிலான குழு தயாரித்த சொல்வளக் கையேட்டை இன்றும் வளர் தமிழ் இயக்க வலைத்தளத்தில் காணலாம்.
என்னைப் போன்றோர் அவரின் தேசிய நாள், நாடாளுமன்ற நேரடித் தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கேட்டுத்தான் வளர்ந்தோம்,” என்று வளர்தமிழ் இயக்கத்தில் அவரோடு பணிபுரிந்த காலத்தை நினைவுகூர்ந்தார் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆர். ராஜாராம்.
செய்தி மொழிபெயர்ப்புடன் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்டிருந்த திரு பழனியப்பன், முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் ஆங்கில நூலைத் தமிழில் ‘உழைப்பின் உயர்வு’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார். பல்வேறு தமிழ்க் கவிதைகள், சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூரின் தமிழ்மொழி சார்ந்த பெரும்பாலான குழுக்களில் அவர் இடம்பெற்றிருந்தார்.
சமூக மன்றம், வசிப்போர் குழு என சமூகப் பணிகளிலும் நீண்டகாலம் சேவை புரிந்துள்ள திரு பழனியப்பன் திருமணப் பதிவாளராக ஆயிரக்கணக்கான திருமணங்களை தமிழில் உறுதிமொழி எடுக்க வைத்து நடத்தியவர்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் செயலாளராக 1980களில் அவர் பணியாற்றினார். கிருஷ்ணன் கோயில் உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், சிங்கப்பூர் கோயில் குடமுழுக்கு விழாக்கள் பலவற்றிலும் முக்கிய அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர். அவரது கட்டுரை இடம்பெறாத குடமுழுக்கு மலர்களே இல்லை எனலாம். “திருமுறை மாநாட்டின் தூணாக விளங்கியவர் பழனியப்பன்,” என்று புகழாரம் சூட்டினார் டாக்டர் சுப. திண்ணப்பன்.
திரு பழனியப்பன், இணையத்தில் தமிழை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழ் இணைய மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகள், கருத்தரங்களில் தொழில்நுட்பத் தமிழ் குறித்த கட்டுரைகளைப் படைத்துள்ளார். வலைப்பூ, வலைப்பக்கங்களிலும் எழுதியுள்ளார்.
“இப்போது நான் செய்துவரும் பல பணிகளுக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார் திரு பழனியப்பனுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றிய அரசாங்க ஊழியர் எஸ்.என்.வி. நாராயணன், 39.
நாடாளுமன்றத்தின் முன்னோடி தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் என்பதற்கு மேலாக அவர் எதார்த்தமாகப் பேசும் நல்ல நண்பரும் கூட என்று திரு பழனியப்பனுக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்.
திரு பழனியப்பன், மனைவி, இரு மகன்கள், மகள், ஒரு பேரக்குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். அவரது நல்லுடல் புளோக் 117 பீஷான் ஸ்திரீட் 12 #23-29 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்.