இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்துத் தடுக்க நடவடிக்கை
சிங்கப்பூர் இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்துத் தடுக்க உதவும் புதிய குழு அமைக்கப்படவிருக்கிறது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் அதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு இடையே போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கும் சராசரி வயது 15.9 என்று மனநலக் கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அந்தக் கண்காணிப்புக் குழுவை அமைக்க இருக்கிறது.
போதைப்பொருள் புழக்கத்திலிருந்து மீண்டு வர உதவும் ‘பெர்த்தாபிஸ்’ மறுவாழ்வு இல்லத்திற்குச் சென்றிருந்தபோது அமைச்சர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
மறுவாழ்வு இல்லத்தில் இருப்போருக்கான திறன் பயிற்சித் திட்டத்தை அவர் தொடங்கிவைத்துப் பேசினார்.
“போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் பெற்றோர் மூலமும் பள்ளிகள், சமுதாயம், தேசிய சேவை எனப் பல்வேறு முனைகளிலும் இதனை அணுக வேண்டும்,” என்று அமைச்சர் கூறினார்.
இளையர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் அமைச்சுகள் நிலைக் குழுவிற்கு அமைச்சர் சண்முகம் தலைமை வகிப்பார்.
குழுவில் கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் மக்கள் கழகமும் இணைந்து செயல்படும்.
அந்த அமைச்சுகளின் மூத்த துணையமைச்சர்கள், துணையமைச்சர்கள், மூத்த நாடாளுமன்ற செயலாளர்கள் என ஏழு பேர் அதில் இடம்பெற்றிருப்பர். இளையர்கள் இடையிலான போதைப்பொருள் புழக்கப் பிரச்சினையைக் கையாள்வதன் தொடர்பில் அரசாங்கத்தை முழுமையாக உள்ளடக்கிய நடவடிக்கைகளில் குழு கவனம் செலுத்தும்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அக்குழு செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் சண்முகம், “போதைப்பொருள் புழக்கம் தீவிரமான பிரச்சினை என்பது சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கிறது. அதை மேலும் வலியுறுத்த வேண்டும். இளையர்களையும் அணுக வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் கஞ்சா சட்ட அங்கீகாரம் பெற்றிருப்பதையும் மலேசியா போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை நீக்கியிருப்பதையும் சுட்டிய செய்தியாளர்கள் சிங்கப்பூருக்கு அதனால் சவால்கள் அதிகரிக்குமா என்று கேட்டனர். வட்டார அளவில் மட்டுமன்றி பொதுவாகவே சவால்கள் அதிகரிப்பதாக அமைச்சர் பதிலளித்தார்.
‘பெர்த்தாபிஸ்’ மறுவாழ்வு இல்லத்தின் புதிய மறுவாழ்வுத் திட்டம், அங்குள்ளோருக்கு சிகிச்சை அளிப்பதோடு வேலைத் திறன் பயிற்சியும் வழங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உளவியல் ரீதியாகவும் திறன் மேம்பாடு மூலமாகவும் அவர்களை வேலைக்குத் தயார்ப்படுத்த அத்திட்டம் கைகொடுக்கும்.
அந்த மறுவாழ்வு இல்லத்தில் ஏறத்தாழ 90 பேர் உள்ளனர். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஈடுபட்ட அவர்கள் 30 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்கள் வேலைத் திறன்களைக் கற்றுக்கொண்டு வேலையில் ஈடுபடுவதன் மூலம் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்க இயலும் என்று கருதப்படுகிறது.