பொன்மணி உதயகுமார்
பள்ளி முகாம் நடவடிக்கையின்போது நேர்ந்த விபத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் மாண்டதால் கடந்த ஈராண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயரம் சார்ந்த நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
உயரம் சார்ந்த நடவடிக்கைகளைத் தொடங்கிய பள்ளிகளில் ஒன்றான கான் எங் செங் பள்ளி, ஜாலான் பத்தேரா வெளிப்புற சாகசக் கற்றல் நிலையத்தில் முகாம் நடத்தி வருவதை நேற்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் பார்வையிட்டார். வெவ்வேறு உயரம் சார்ந்த நடவடிக்கைகளில் சுமார் 80 உயர்நிலை மூன்று மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு உயரம் சார்ந்த நடவடிக்கைகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளும் இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
இதன்படி, வழக்கமான செயல்பாடுகளில் பாதி அளவு ஆற்றலுடன் மட்டுமே நிலையத்தின் உயரம் சார்ந்த நடவடிக்கை மையங்கள் செயல்படும்.
இதனால் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பங்கேற்பதற்கு மாணவர்கள் கூடுதல் நேரம் பெறுவர் என்றது அமைச்சு.
இவ்வாறு பாதியளவிலான செயல்பாடுகள் மார்ச் 31 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கைகளை நடத்தும் பயிற்சியாளர்களுக்கான புதிய தரச்சான்று நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தலைமையகத்தைச் சேர்ந்த முதன்மை வெளிப்புற சாகசக் கல்வியாளரான 53 வயது குவாங் யோக் வீ தெரிவித்தார்.
பாதுகாப்புக் கயிறுகள் போன்ற பொருள்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன், முழுமையான பாதுகாப்புப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக பயிற்சியாளர்கள் ஒப்புதல் தெரிவித்துக் கையெழுத்திடுவது போன்ற நடைமுறைகளால் பொறுப்பேற்புத்தன்மை அதிகரித்துள்ளது.
பயிற்சியாளர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த உதவுவர்.
பாதுகாப்புக்கான பொருள்கள் சரியாக இயங்குவதுடன் தொழில்துறை தரநிலைக்கேற்ப இருப்பதை ஒவ்வொரு காலாண்டிலும் உறுதிசெய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயரம் சார்ந்த பள்ளி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிவிட்ட நிலையில் தாங்கள் பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளதாகவும் புதிய வகுப்பு நண்பர்களுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் மாணவர்கள் கூறினர்.
பள்ளி முகாமின்போது உயரம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக அறிந்துகொண்ட உயர்நிலை மூன்று மாணவர் முகமது இர்பான், தான் உற்சாகம் அடைந்ததாகப் பகிர்ந்துகொண்டார். நண்பர்களுடன் பங்கேற்ற இந்த மூன்று நாள் முகாம் சிறப்பாக இருந்தது என்றும் அமைச்சருடன் கலந்துரையாடியது தனக்கு மகிழ்வூட்டியது என்றும் அவர் சொன்னார்.