சிங்கப்பூரின் ஆகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான டிபிஎஸ், அதன் அனைத்து வீட்டுக் கடன் தொகுப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியிருக்கிறது. இது நேற்று முன்தினம் இரவு முதல் நடப்புக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகாலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட வீட்டுக் கடன் தொகுப்பையும் அது ரத்து செய்துள்ளது. முன்னதாக இந்த வட்டி விகிதம் 2.05 விழுக்காடாக இருந்தது.
டிபிஎஸ் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு ஆராய்ந்தபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க மத்திய வங்கியால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனைக் கவனத்தில் கொண்ட சிங்கப்பூரின் 'யுஓபி', 'ஓசிபிசி' வங்கிகள் இரண்டும் தங்களின் வீட்டுக் கடன் தொகுப்புகளின் வட்டி விகிதத்தைக் கடந்த வாரம் உயர்த்தின. அடுத்தபடியாக டிபிஎஸ் வங்கியும் அதே வழியில் அதன் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை கூட்டியுள்ளது.
ஈராண்டு கால நிலையான வட்டி விகிதத்தை யுஓபி, ஓசிபிசி வங்கிகள், ஆண்டுக்கு 2.65 விழுக்காடாக உயர்த்தின.
இதற்கிடையே, ஆண்டுக்கு 2.75 விழுக்காடு என்ற டிபிஎஸ்ஸின் தற்போதைய நிலையான வட்டி விகிதமே இதர மூன்று உள்ளூர் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
டிபிஎஸ்ஸின் இரண்டு ஆண்டுக்கான நிலையான வட்டி விகிதத் தொகுப்பு 0.3 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகமாகி ஆண்டுக்கு 2.75 விழுக்காடாக உள்ளது. மூன்று ஆண்டுக்கான நிலையான வட்டி விகிதத் தொகுப்பு தற்போது 0.15 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடி ஆண்டுக்கு 2.75 விழுக்காடாகும்.
இதன்படி, வீடு வாங்கும் ஒருவர், இரண்டு ஆண்டுக்கான நிலையான வட்டி விகிதத்தில் 300,000 வெள்ளி கடனை 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துதற்கான கடனைப் பெற்றால் மாதந்தோறும் 1,384 வெள்ளியை வங்கிக்குக் கட்ட வேண்டும். இதற்கு முன்பு 2.45 விழுக்காடு நிலையான வட்டி விகிதத்தில் இதே கடனுக்கு மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை $1,338ஆக இருந்தது. அதாவது தற்போது ஒவ்வொரு மாதமும் கூடுதலாக $46 வெள்ளி செலுத்த வேண்டியிருக்கும்.
இதற்குமுன் 2019ஆம் ஆண்டில் காணப்பட்ட 2.88 விழுக்காட்டு உச்சத்தை மீண்டும் தொட வாய்ப்புள்ளதைத் தற்போது சிங்கப்பூரின் உயரும் வட்டி விகிதங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, நிலையான மற்றும் ஏற்றஇறக்கமான வட்டி விகிதங்களைக் கொண்ட வீட்டுக் கடன் தொகுப்புத் திட்டம் ஒன்று உள்ளதாக டிபிஎஸ் வாடிக்கையாளர் வங்கி குழுமத்தின் வீட்டுக் கடன் தீர்வுப் பிரிவின் தலைவரான நெல்சன் நியோ தெரிவித்துள்ளார்.
கடன் தொகையில் பாதியை, நிலையான வட்டி விகிதப்படி பெற்றுக்கொள்வதும் மீதித் தொகையை மாறுபடும் சிறப்பு வட்டி விகிதத்துடன் பெற்றுக்கொள்வதுமே அத்திட்டம். ஐம்பது-ஐம்பது வட்டி விகிதத்தைத் தவிர 40 விழுக்காடு நிலையான வட்டியும் 60 விழுக்காடு ஏற்றஇறக்கமான வட்டியும் அல்லது 30 விழுக்காடு நிலையான வட்டி விகிதமும் 70 விழுக்காடு ஏற்ற இறக்கமான வட்டியும் கொண்ட வீட்டுக் கடன் வாய்ப்புகளும் உள்ளன. முழுக் கடன் தொகையையும் நிலையான வட்டி விகிதத்தில் கட்டுவதைக் காட்டிலும் இவ்வழியில் கடன் தொகையைச் செலுத்துவது குறைவாக இருக்கும் என்றும் திரு நியோ குறிப்பிட்டார்.