இந்தோனீசியாவைச் சேர்ந்த இஸ்லாமிய சமயப் போதகரான அப்துல் சொமாட் பத்துபாரா, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டவராக இருப்பதால் சிங்கப்பூருக்கு வர அவருக்கு அண்மையில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைக் கண்டித்து இந்தோனீ சியத் தலைநகர் ஜகார்த்தாவிலும் மேடானிலும் வெள்ளிக்கிழமை அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு அதிருப்திக் குரல் எழுப்பினர்.
மேடானில் கிட்டத்தட்ட 250 பேர் அங்குள்ள பிரதான பள்ளிவாசலில் ஒன்று திரண்டு பிறகு சிங்கப்பூர் தூதரகத்தை நோக்கிச் சென்றனர்.
சிங்கப்பூர் தூதரகத்துக்கு முன் நின்றுகொண்டு சிங்கப்பூருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 900 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மேடான் காவல்துறைத் தலைவர் வெலண்டினோ ஆல்ஃபா டாட்டாரேடா தெரிவித்தார்.
நிலைமை தங்கள் கட்டுக்குள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளும் மேடான் நகரைச் சேர்ந்த முக்கிய இஸ்லாமிய போதகரும் சிங்கப்பூர் தூதரைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் ஜகார்த்தாவில் ஏறத்தாழ 50 பேர் சிங்கப்பூர் தூதரகத்துக்கு முன் நின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, இதுபற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், இந்தோனீசிய தூதரக நிலவரங்களைச் சிங்கப்பூர் அரசு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
இந்தோனீசிய சமய போதகர் அப்துல் சொமாட் பத்துபாரா சிங்கப்பூர் வர இம்மாதம் 16ஆம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி தன்னுடைய நிலையை விளக்கி அடுத்த நாள் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூருக்குள் வர ஒருவருக்கு அளிக்கப்படும் அனுமதி என்பது தானாகவே கிடைத்துவிடாது. அது அவரின் உரிமையும் அல்ல. ஒவ்வொரு விண்ணப்பமும் அதன் அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
வன்செயல் அல்லது தீவிரவாத மற்றும் பிரிவினைவாதப் போதனையை யார் ஆதரித்தாலும் அதை சிங்கப்பூர் அரசாங்கம் கடுமையான ஒன்றாக கருதுகிறது என்று பேச்சாளர் விளக்கினார்.