கோவை: சவுக்கு சங்கர் வியாழக்கிழமை (மே 9) காலை கோவை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வலது கையில் கட்டு போட்டிருந்தார். பின்னர் சவுக்கு சங்கர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை இணையக் குற்ற காவல்துறையினர் கடந்த 4ஆம் கைது செய்தனர். தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வழக்குப் பதியப்பட்டது.
அவரது வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கருக்கு காவலர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது, அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.