சென்னை: அண்மைய சில நாள்களாக சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருப்பதாக ஒருதரப்பினர் புகார் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாகச் சரிசெய்ய 60 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை வெளியிட்ட தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநிலத்தின் மின்சாரத் தேவை, மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை என்றார்.
மேலும், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் மின் விநியோகப் பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவடக் கம்பிகள், மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
“தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்யுமாறும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.