குன்னூர்: மேட்டுப்பாளையத்தில் பெய்த திடீர் மழை காரணமாக ஏறக்குறைய 20 ஆயிரம் வாழைகள் சேதமடைந்துள்ளன.
உதகை பகுதியில் பெய்த இடி, மின்னலுடன் கூடிய கன மழையின் போது 40 மில்லி மீட்டர் மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் அவ்வப்போது வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர யோசிக்கின்றனர். இந்நிலையில் நீலகிரி, மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் சனிக்கிழமை திடீரென கோடை மழை கொட்டித் தீர்த்தது. அச்சமயம் சிறுமுகை லிங்காபுரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் ஏராளமான வாழைகள் சாய்ந்தன.
இரு நாள்களாக நீடித்த மழையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒன்பது மாத பயிரான வாழை, அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் சூறாவளிக் காற்றில் சிக்கி முறிந்து வீணானது விவசாயிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாள்களாக நீலகிரியில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் கோடையில் பெய்த திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்திருக்கும் என பொதுமக்கள் உற்சாகத்துடன் குறிப்பிட்டனர்.
மழை காரணமாக, குன்னூர் லேம்ஸ் ராக் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் மீது மரம் விழுந்ததில் அவை கடுமையாகச் சேதமடைந்தன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர் காற்றுடன் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது என்றும் சிறுமுகை உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த ஏழு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் அம்மையம் கூறியுள்ளது.