சென்னை: சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், எல்சிடி திரைகள் மூலம் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும் மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.
43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிகத் தாழ்வாக அமைக்கப்பட உள்ளன.
2ஆம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த ரயில்கள் 2025 ஆகஸ்ட் முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஜிபிஎஸ், ‘சிக்னல் ரீடிங்’, ‘டைமிங் சீகுவென்ஸ்’ ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.