சென்னை: மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மமங் தாய் எழுதிய The Black Hill (2014) என்ற ஆங்கில நாவலை ‘கருங்குன்றம்’ (2016) என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார் கண்ணையன். இந்த நூலுக்குதான் விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1954ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதிய எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்ப் பிரிவில் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது பெற்றுள்ளார் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
இவர் பல நல்ல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 1857, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி, புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை இவர் மொழிபெயர்த்துள்ள நூல்களாகும்.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து கண்ணையன் தட்சிணாமூர்த்திக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.