சென்னை: தமிழகத்தில் ஜூன் மாதத்திற்குப் பிறகு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது.
தீவுத்திடலில் டிசம்பர் 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்திரீட் பந்தயம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் புரமோஷன் நிறுவனம், இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் மிக்ஜாம் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு செவ்வாய்க் கிழமை (13 பிப்ரவரி) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘’சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும். பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும்,” என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள், “கார் பந்தயம் நடத்த அரசு ரூ.40 கோடி செலவு செய்வது தவறு. ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை கோரிய வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளனர்.